Wednesday 14 March 2018

வனத்துறை மீது பழியை சுமத்திவிட்டு தப்பிக்க பார்க்காதீர்!




1962 ம் ஆண்டு பார்சன்ஸ்வேலி துக்காரமந்து சரக வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வன காப்பாளர்கள் திரு. தனஞ்செயன், திரு. வாசுதேவன், திரு. ராமசாமி மார்ச் 13ம் தேதி 1962 ல் தீப்புகையால் மூச்சுத்திணறி இறந்து போனார்கள். வனத்தைக் காக்க உயிர் நீத்த பலரில் இவர்களும் அடங்குவார்கள்.

ஆனால் இன்று வரை வனத்துறை பணியார்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் அரசால் கொடுக்கப்படவில்லை. 300 கோடிக்கு சாட்டிலைட் ஏவும் நாட்டில் எந்த நவீன கருவிகளும் வனத்துறையிடம் இல்லை. அவர்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லை. இன்னும் எதிர்த்தீ வைப்பு முறையே பின்பற்றப்படுகிறது. வருடத்தில் 5 மாதங்கள் வனத்தீ தடுப்பு காவலர்களை தற்காலிகமாக பணியமர்த்துகிறார்கள்.


தொடர்ச்சியாக வனப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக வாழ்க்கையைக் கடந்த வன அர்ப்பணிப்பாளர்களை எனக்குத் தெரியும். அவர்களின் அனுபவ அறிவு விசாலமானது. 
சமீபத்தில் மேட்டுப்பாளையம் அருகே யானைக் குட்டியை மீட்டு தோளில் சுமந்து சென்று தாயிடம் விட்ட தற்காலிகப் பணியாளர்களை நாம் பார்த்தோம். இந்த அரசு இவர்களைக் கண்டு கண்டு கொண்டதே இல்லை.

நீலகிரியில் வனஉயிர் காக்கும் மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டபின் அங்கு இதுவரை மருத்துவர் நியமிக்கப்படவில்லை.

வருடம் தோறும் தான் தீப்பற்றி எரிகிறது கானகங்களில் கடந்த இரு மாதஙகளாக தீ ஆங்காங்கே எரிந்து கொண்டுதானிருக்கிறது. நேற்று மலையேற்றத்திற்கு சென்றவர்கள் சிக்கிக் கொண்டதால் இப்போது விவாதிக்கப்படுகிறது.

மலையேற்றம் செல்பவர்களும் வனச்சூழல் அறிந்து செல்ல வேண்டும். கூடவே செல்லக்கூடிய வனத்தைப்பற்றி அறிந்தவர்கள் உடன் இருப்பது மிக அவசியம். சில மீடியாக்கள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசு தாமதமாக ஹெலிகாப்டர்களை அனுப்புகிறது.

எப்போதும் போல் மக்கள் தான் களத்தில் முதலில் இறங்கியுள்ளார்கள் அந்த குரங்கனி எஸ்டேட் மக்களுக்கு அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்வோம்.

அரசு நவீன கருவிகளை இனிமேலாவது வாங்க வேண்டும். வனத்துறையை இன்னும் நவீனப்படுத்த வேண்டும். இந்த தீவிபத்து மட்டுமல்ல எல்லா பேரிடர் காலங்களிலும் இது தான் நிலைமையாகவே இருக்கிறது.

மேலும் மக்களாகிய நாம் மட்டும் சரியாக இருக்கிறோமா? அந்த காட்டில் தீ வைத்த யார்?

முருங்கைப் பூ


முருங்கைப் பூ

முருங்கை, ஏராளமான சத்துக்களின் புகலிடமாகத் திகழ்கிறது. கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்ஃபர் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் புரதச்சத்துக்களும், உடல் நலத்துக்கு உதவும் கொழுப்பு அமிலமான ஒலீயிக் அமிலமும் (Oleic acid) இதில் அடங்கியுள்ளன. ஆனாலும்கூட, முருங்கையின் பலன்களை நாம் முழுமையாகப் பெறுவதில்லை.

இதில் இருந்து கிடைக்கக்கூடிய இலை மற்றும் காய்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். பெரும்பகுதி விரயம் செய்யப்படுகிறது.
பூ மற்றும் விதைகள் முற்றிலுமாகவே கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. முருங்கைப் பூ, காய், விதை, இலை அனைத்தையுமே மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முடியும்.
முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளுடன் சேர்த்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் அதிக நாட்டம் உண்டாகும்.

முருங்கைப் பூ தேநீர்:

முருங்கைப் பூவை உலர வைத்து, தூளாக்கி, தேயிலை போல் பயன்படுத்தலாம். முருங்கைப் பூ தேயிலை, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

சித்தர்கள் முருங்கை குறித்து பாடியுள்ளனர்.

அகத்தியர் குணபாடத்தில்,
"விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி."

என்று பாடியுள்ளார்.

பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
ஆண்களுக்கு:
உடல் சோர்ந்து உள்ளம் சோர்ந்து போனவர்கள் தினமும் நான்கைந்து முருங்கைப்பூக்களைத் தினமும் இரண்டுவேளை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூவைச் சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

குழந்தைகளுக்கும் இது அதிக இரும்புச்சத்துகொண்டதால் நல்ல பலனளிக்கும். ஞாபக சக்தியை பலப்படுத்தும். கண்களுக்கும் நல்ல சக்தியைத் தரும். 

Saturday 6 January 2018

பெயர் மாற்றம் செய்வது எப்படி?


       பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில்பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்துவாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திராகுமார் என்றிருத்தல்) ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில்விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறுவிண்ணப்பிப்பது? பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்கவேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினைநிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின்புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி,தமிழக / மத்திய அரசின் ‘அ’
மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்துசான்றொப்பம் பெறப்பட வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து,தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்குஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/ வாக்காளர்அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்டஇருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலைஇணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர்மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலைஇணைக்க வேண்டும்.
மதமாற்றத்தால் பெயர் மாற்றம் செய்பவர்கள் அந்தந்த மதத் தலைவர்கள், குருமார்கள், முத்தவல்லிகள், பாதிரியார்களிடம் சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் கூடுதலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம்
9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்
.தமிழில் பெயர் மாற்றக்
கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் +
அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம். அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர்(வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்
செலுத்தலாம். பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்கவேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழையபெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’என்று பிரசுரிக்கஇயலாது.பிரசுரம்
செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றைஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின்பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும்கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும்கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்படமாட்டாது. இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?

அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில்வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும். தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரியநபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து ,தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப்பெற்றுச் செல்லலாம். விண்ணப்பத்தில் கையெழுத்திடு முன்: சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரியஇடத்தில் கையொப்பம் இட வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor)இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமேகையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின்அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல்(Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்படவேண்டும். கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/ தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிடவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: உதவி இயக்குநர் (வெ), சென்னை-2
இல் 2852 0038, 2854 4412 மற்றும் 28544413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
படிவங்களை தரவிறக்கம் செய்ய...for download click below>>
www.stationeryprinting.tn.gov.in/forms.htm >என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

Friday 5 January 2018

தமிழ் தட்டச்சு பழக...

கணிணி உலகில் வாழும் நாம் நம் மொழியில் தட்டச்சு செய்ய பழகியுள்ளோமா? இங்கிலாந்தில் ஒருவன் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரியாமல் விழிப்பானா? ஆனால் நாம் விழிப்போம். காரணம் நம்மிடையே எப்போதும் உள்ள ஆர்வமின்மையும், மொழியின் மீதான பற்றுதல் குறைவுமே ஆகும். மொழிப்பற்று என்பது வெறி அல்ல. அது அன்பு, அது ஒரு நேசம், நாம் நம் மொழியைக் காதலிக்க வேண்டும் . அப்போது தான் அதை அழகுற ரசிக்க இயலும். எனவே மொழி வெறியை விட்டு விட்டு மொழியின் மீதான அன்பை செலுத்துங்கள். அதை கசடறக் கற்றுக் கொள்ளுங்கள். அது நமது தாய் மொழி எனவே அதனை நேசியுங்கள். நிறைய வாசியுங்கள். இந்த கணிணி உலகில் நம் மொழியை அழகாக தட்டச்சு செய்ய கற்போம் வாருங்கள்.

aasan tamil typing tutor



Tuesday 18 October 2016

குடிகாரர்களின் கவனத்திற்கு....


கீழே உள்ள படங்கள் கடந்த மே மாதத்தில் நான் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் செல்லும் சாலையில் உள்ள காமராஜர் அணையில் எடுத்தது. எவ்வளவு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா? உங்களால் தான் இந்ந நீர்நிலை எவ்வளவு மாசுபட்டுள்ளது தெரியுமா? ஒருபுறம் இதில் கலக்கும் ரசாயன கழிவுகள் மறுபுறம் குடிகாரர்களின் பாட்டில்கள், திண்பண்ட நெகிழிக் குப்பைகள். கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீர்களா?

இந்த அணையின் அழகை ரசிக்கத்தானே வருகின்றீர்கள்? அதன் அழகு பாதுகாக்கப்படவேண்டாமா? உங்கள் பிள்ளைகள் அதனை ரசிக்க வேண்டாமா? உங்கள் இழிவான செயல்களுக்கு பின் அதனால் ஏற்படும் கேடுகளை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?




ஒரு காலத்தில் இதில் விளையாடி இருக்கின்றோம் நாங்கள். இன்று நீரில் கை வைக்க முடிகிறதா? நாற்றமடிக்கிறது நீரில்...
                                                     
சரி கரையில் நடக்கத்தான் முடிகிறதா? கரையெங்கும் பாட்டில்களை உடைத்துப் போட்டிருக்கின்றீர்கள். உங்கள் வீடுகளில் இப்படித்தான் குடித்தபின் பாட்டில்களை உடைத்துப் போடுவீர்களா? நீங்கள் உடைத்துப் போட்டுச் சென்ற பாட்டில் சில்களால் எத்தனை குழந்தைகள் காயம்பட்டுள்ளன தெரியுமா? எத்தனை விலங்கள் அதில் பாதிக்கப்பட்டிருக்கும். அறிவுள்ளவன் இந்த இழிச் செயலை செய்வானா? ஒரு நாட்டை நேசிப்பது என்பது ஜனகனமன பாடுவதும், கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தால் பட்டாசு வெடிப்பதும் தான் என்று எண்ணியே வளர்ந்து வரும் பார்த்தீனியச் செடிகள் நீங்கள். அதுவல்ல இந்த மண்ணைப் பாதுகாப்பதும், இங்குள்ள மலைகள், மரங்கள், நதிகள், நிர்நிலைகள் உள்ளிட்ட யாவற்றையும் பாதுகாப்பதும் மக்களின் மீது அன்பு செலுத்துவதும் தான் உண்மையாக நாட்டை நேசிப்பது என்பது. அதுவும் சமீபகாலமாக இந்த செயல் இளைஞர்களிடத்தில் பெருகி வருகிறது.

                                                       குப்பைக் கழிவுகள், மது பாட்டில்கள்
நாலு பேர் சேர்ந்துவிட்டால் பாட்டில் வாங்கிக் கொண்டு ஊட்டிக்கு வருவது குடித்துவிட்டு குப்பையை வீசிவிட்டு செல்வது, பாட்டில்களை உடைத்துப் போடுவது அடேய் நீங்கள் வருவது குப்பைத் தொட்டியின் பக்கம் அல்ல மலைகளின் அரசியின் பக்கம்! இனிமேலாவது பாட்டில்களோடும், நெகிழிகளோடும் நெருங்காதீர்கள் நீலகிரியின் பக்கம் மட்டுமல்ல எந்த சுற்றுலா இடங்களுக்கும் தான்!

#Ban_plastics #Ban_liquor

Thursday 11 August 2016

தேன் பழம் - சிங்கப்பூர் செர்ரி (Muntingia calabura)

தேன் பழம் அல்லது நெய் பழம் என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பழம் செர்ரிப் பழ வகையைச் சார்ந்தது.

இது சிங்கப்பூர் செர்ரி, ஜமைக்கா செர்ரி, பனாமா செர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. மர வகையைச் சார்ந்த இந்த தாவரத்தின் தாவரவியல் பெயர் முட்டிங்கியா காலபுரா (Muntingia calabura) . Bird's cherry என்றும் அழைக்கப்படுகிறது.


    Muntingia calabura தேன் பழம் 


இதில் விட்டமின் சி, பி மற்றும் தாதுக்கள் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துக்களும் அடங்கியுள்ளது.

தலைவலி, சளி, ப்ளு காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது. மேலும் குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றையும் குணப்படுத்தவல்லது. இதன் இலைகளை தேநீராக சில மேலை நாடுகளில் அருந்துகின்றனர்.

 
Muntingia calabura தேன் பழ காய் 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்லெட்டிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உற்சாகத்தையும், சக்தியையும் அளிக்கவல்லது.
                                                                                                                   - மலைநாடன் ஆசாத்